தேனீக்கள்

தேனீ அதன் மூக்காலோ, வாயாலோதான் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. தேனீயிடமிருந்து வரும் ரீங்கார ஓசை, அதன் இறகுகளின் மிக விரைவான துடிப்பால்தான் ஏற்படுகிறது. அப்படி இறகுகள் துடிப்பதன் மூலம்தான் தேனீ பறக்கிறது. அதன் இறகுகள் நொடிக்கு நானூறு முறை துடிக்கின்றன. அதிவிரைவான இந்த அசைவு காற்றில் உண்டாக்குகிற அதிர்வு நம் காதை அடையும் போது நாம் அதை ரீங்காரமாக உணர்கிறோம்.
சமூக வாழ்க்கை நடத்தும் தேனீக்களின் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீதான் இருக்கும். அந்தக் கூட்டில் அதுதான் சர்வாதிகாரி. கூட்டில் இன்னும் இரண்டு வகை தேனீக்களும் இருக்கும். கூட்டை நிலைக்கச் செய்வதற்காகப் பாடுபடும் பெண் தேனீக்கள் ஒரு வகை. இவை இனப்பெருக்க திறனற்றவை. இன்னொரு வகை தேனீக்கள், சோம்பேறியான ஆண் தேனீக்கள்.
ராணித் தேனீ, மற்ற தேனீக்களைவிட உருவத்தில் பெரியதாக இருக்கும். வேலைக்காரிகளான பெண் தேனீக்கள்தான் தேனும், மகரந்தப் பொடியும் சேகரிக்கும். மெழுகால் கூடு கட்டுவது, கூட்டைச் சுத்தப்படுத்துவது, குஞ்சுத் தேனீக்களுக்கும், ராணித் தேனீக்கும் உணவு கொடுப்பது முதலான பல வேலைகளையும் பெண் தேனீக்கள்தான் செய்கின்றன.